பக்கங்கள் செல்ல

Thursday, November 15, 2018

தொடர் 1: பரிணாமம் உண்மையா ஊகமா?

  அல்லாஹ்வின் திருப்பெயரால்........


 பரிணாமம் டார்வினுக்கு முன்

            பரிணாமம் குறித்து விளங்குவதற்கு அதன் வரலாற்று பார்வையை முதலில் நாம் அறிந்து கொள்வது இன்றியமையாததாகும். அனைவரும் பரிணாமம் குறித்து ஓரளவிற்கு அறிந்திருந்தாலும் அதன் கட்டமைப்பை புரிந்து கொள்ள பரிணாமம் குறித்த வரலாற்றை அறிந்து கொள்வது சிறந்த வழியாகும். இன்ஷா அல்லாஹ் அதன் வரலாறு குறித்து நாம் பார்ப்பதற்கு முன்பு பரிணாமம் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.

பரிணாமம் என்றால் என்ன?
          பரிணாமம் (Evolution) என்பதற்கு மாற்றம் என்பது நேரடி பொருளாகும். ஒரு உயிரினத்தின் தலைமுறை தலைமுறையாக வடிவம், நடத்தை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றமே பரிணாமம் என எளிமையாக பொருள்படுத்தலாம். ஒரு உயிரினத்தின் அனைத்து நிலையிலும் அதாவது டி.என்.ஏ(DNA) வில் துவங்கி சமூக நடத்தை ஆகிய அனைத்திலும் பரிணாமம் மாற்றத்தை ஏற்படுத்துவதாக பரிணாமவியலாளர்கள் கூறுகின்றனர். சமிபத்தில் ஹாரிசன் (2001) பரிணாமம் என்பது காலந்தோறும் மாறுபாட்டுடனான சந்ததி வழியாக ஏற்படும் மாற்றம் என வரையறுக்கிறார். (1)

பரிணாம காலவரிசை ஒரு பார்வை
         
               பரிணாமவியல் பல நூற்றாண்டுகளாய் மனித வரலாற்றில் பல பரிணாமம் அடைந்து வந்திருக்கிறது. அதனை முன்மொழிந்தவர்களில் சில குறிப்பிடத்தகுந்த நமது ஆய்விற்கு தேவை படுபவற்றை மட்டுமே மேலோட்டமாக காணவிருக்கிறோம். 
      கிரேக்க தத்துவவியலாளர் ஆன தேல்ஸ் உயிரினங்கள் நீரில் இருந்து தோன்றி படிப்படியாக பல்கிப்பெருகின என்ற கருத்தை முன்வைத்தார்.  அனாக்ஸிமெண்டர் இன்றைய பரிணாமவியலின் தந்தை என்று கூறலாம். அவர்தான் உயிர்கள் படிநிலைகளில் ஈரப்பதத்தில் இருந்து தோன்றுகின்றன.  
          மேலும் மனிதன் வேறு ஒரு உயிரினத்தில் இருந்து பரிணமித்தவன் என்ற கருத்தை முன்வைத்தார். 
இதுபோல் எம்படோக்ல்ஸ், எபிக்கூயூரியஸ் போன்றவர்களின் வாதங்களின் வேர்களையும் டார்வினின் தத்துவங்களில் காணமுடியும். இவ்வாறு உயிரினங்களில் தோன்றும் மாற்றங்கள் யாவும் எதேச்சையானவை, எதுவும் முன் நிர்ணயிக்கப்பட்டதில்லை என்ற கருத்தை முன்வைத்தனர். இன்றிருக்கும் பரிணாமவியலாளர்கள் கூறுவது போல் மாற்றங்கள் யாவும் வருங்கால பயன் நோக்கியதல்ல என்ற கருத்தை அக்கால கிரேக்க தத்துவ்வியாளர்களில் ஒரு பகுதியினர் கொண்டிருந்தனர்.

          இதற்கு எதிர் கருத்தை கொண்டிருந்த, அதாவது மாற்றங்கள் யாவும் பயன் நோக்கியது அல்லது முன் நிர்ணயிக்கப்பட்டது என்ற கருத்தை முன்வைத்த அணியிலும் குறிப்பிடும் படியான கிரேக்க தத்துவவியாளர்கள் இருந்தனர். இவர்கள் இயல்திட்ட வாதத்தை(Teleology) முன்வைத்தனர். அதாவது இயற்கையில் உயிர்களில் தோன்றும் இத்தகைய மாறுதல்களின் காரண காரிய தொடர்புகள் தற்செயல் நிகழ்வுகள் அல்ல. இறுதி விளைவு நோக்கிய ஒரே மூலத்திட்ட அமைப்பின் கூறுகளே என்று வாதிட்டனர். ஹெராகிளிடஸ் போன்றவர்கள் இது கடவுளின் திட்டம் என வாதிட்டனர்.
      
அதே போன்று அரிஸ்டாட்டில் , பிளாட்டோ போன்றவர்கள் இயல்திட்ட வாதத்தை முன்வைத்தனர். அதாவது மனிதன் என்ற உயரிய படைப்பு நோக்கின் தோல்வியுற்ற சோதனைகளின் விளைவுதான் ஏனைய உயிரினங்கள் என்ற கருத்தை கொண்டிருந்தனர். இத்தகைய கருத்தை பிளாட்டோ குறியதால் தற்கால் பரிணாமவியலாளரான ஏர்ண்ஸ்ட் மைர் பிளாட்டோவை "Great Antihero of Evolution" என்று கூறுகிறார்.(2
     இயல்திட்ட வாதங்களின் எண்ண ஓட்டங்கள்தான் லாமார்க்கின் தத்துவங்களில் காண முடியும். இந்த வகை பரிணாம கோட்பாடுகளை லாமார்க்கிஸம் என்று இன்றைய நவீன டார்வினிஸ்ட்களால் கூறப்பட்டு மறுக்கவும் படுகிறது. ஆனால் உண்மையில் பரிணாமவியலின் பல கொள்கைகள் இந்த லாமார்க்கின் கோட்பாட்டின் அடியொட்டி பயணிக்கும் நிலையில் தான் இருக்கிறது என்பது வரும் தொடர்களில் இன்ஷா அல்லாஹ் நாம் புரிந்து கொள்வோம்.........

தற்கால பரிணாமவியலின் ஆரம்பம்: 
     ஹட்டன் (1795) என்ற நிலவியலாளர் படிப்படியாக முடிவை அடையும் கொள்கையை (Gradualism) முன்வைத்தார். நிலமானது பல படிநிலைகளில் சிறுமாற்றங்களால் நிலவியல் அமைப்புக்களான மலை, ஆறு போன்றவற்றை தோற்றுவிக்கிறது என்ற கருத்தை முன்வைத்தார். அதுவரை செல்வாக்குடன் இருந்த அழிவமைவு கோட்பாட்டை(Catastrophism) மறுத்தார்.
அதாவது மாபெரும் வெள்ளங்களும், நிலநடுக்கங்களும் மேலும் அது போன்ற பேரழிவுகளுமே நிலவியல் அமைப்பை தோற்றுவித்தன என்ற கோட்ப்பாடை மறுத்தார். எப்படி நிலவியல் மெதுவான சிறு சிறு மாற்றங்களால் நில அமைப்புகளை தோற்றுவிக்கின்றதோ அதே போல் மாறுபட்ட உயிரினங்கள் ஒரு உயிரில் இருந்து சிறு சிறு மெதுவான மாற்றங்களால் தோன்றின என்ற கருத்தை முன்வைத்தார்.

     
 
சார்லஸ் லையல்(1830) : டார்வினின் நண்பர். இவரும் படிப்படியாக படிவளர்ச்சியால் முடிவை அடையும் கொள்கையை (Gradualism மறுவடிவமான Uniformitarianism) முன்வைத்தார். இவர் டார்வினின் இயற்கைத் தேர்வு மூலமாக உயிரினங்களின் தோற்றம் (Origin of Species by Natural Selection) வெளிவர பெரிதும் உதவியாக இருந்தார்.

பரிணாமவியலாளர்களுக்கு ஒவ்வாத அழிவமைவுக் கோட்பாடு: 


    படிவளர்ச்சி கொள்கைக்கு நேர் எதிரான கொள்கை அழிவமைவு கோட்பாடாகும். இதை முன்பே விளக்கியது போல் இது பேரழிவுகளே நில அமைப்புக்களை தோன்றுவதற்கு காரணமாயின். இதுதான் வேறுபட்ட உயிர்கள் தோன்ற காரணமாயின என்ற கருத்தை முன்வைத்தது. புகழ்பெற்ற பக்லேண்ட், கூவியர் போன்ற நிலவியலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கோட்பாடாகும். இந்த கோட்பாடானது பரிணாமவியலாளர்களும் பெரிது ஒவ்வாமையை ஏற்படுத்த மூலகாரணம்:

1)இந்த கோட்பாட்டை தூக்கிப் பிடித்தால் அன்றிருந்த கிறித்தவர்கள் கூறுவது போல் இவ்வுலகம் தோன்றி 5000 ஆண்டுகள்தான் ஆகிறது என கூறப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

2) ஒரு திடீர் செயல்பாடு ஒரு உயிரினத்தை அழித்து வேறு ஒரு உயிரினத்தை தோற்றுவிக்கும் என்ற கொள்கையை இந்த கோட்பாடு முன்வைப்பதால், இந்த இயற்கை நிகழ்வுகள் யாவும் முன்முடிவு செய்யப்பட்ட ஒரு விசயத்திற்காக நிகழ்கிறது என்ற தோற்றத்தை அது ஏற்படுத்துகிறது. ஆக இறைமறுப்பை முன் நிறுத்தும் பரிணாமவியலாளர்களால் இந்த கோட்பாட்டை ஜீரணிக்க சிறிது சிரமமாக இருப்பதில் வியப்பேதும் இல்லை. 
இத்தகைய காரணங்களின் சாயல் லேசாக தெரிவதால்தான் லாமார்க்கின் கோட்பாடே மறுக்கப்படுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எந்த கோட்பாடெல்லாம் முடிவு நிர்ணயிக்கப்பட்டதாக கூறுகிறதோ அவையெல்லாம் இன்றைய டார்வினிஸ பரிணாமவியலாளர்களுக்கு ஒவ்வாத கோட்பாடாக ஆகிவிடும். ஏனென்றால் அவை அறிவார்ந்த இறை( Intelligent Creator) குறிபிட்ட நோக்கத்திற்காக நிகழ்வுகளை தோற்றுவிக்கிறார் என்ற கொள்கைக்கு இட்டுச்சென்றுவிடும் என்ற பயம்தான்.

      ஆனால் விதி அவர்களை விடுவதாக இல்லை. இன்றும் இந்த கோட்பாடு கூறும் விளைவுகளின் சுவடுகளை படிமங்கள்(fossil) கொண்டிருக்கின்றன. டைனோசர் போன்ற உயிர்களின் பேரழிவிற்கு இத்தகைய இயற்கை சீற்றங்களே குறிப்பாக விண்கல் மோதலே காரணமாக யூகிக்கப்படுகிறது.   
(ஆனால் டைனோசரின் சமகாலத்தில் வாழ்ந்த உயிர்கள் இன்றும் வாழும் படிமங்களாக பூமியில் வாழ்கின்றன என்பது நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று)

           பல ஆயிரம் ஆண்டுகள் நிலவியல் மாற்றங்களை சில மணிநேரங்களில் சுனாமி, நிலநடுக்கம், விண்கல் மோதல் போன்ற இயற்கை சீற்றங்கள் தோற்றுவித்துவிடுவதும், அதை இன்றும் நாம் காண்முடிவது பரிணாமவியலாளர்களை சற்று உறுத்தத்தான் செய்கிறது. ஆனால் இதில் கூத்து என்னவென்றால் இதே போன்ற திடீர் வெடிப்புக்கள் உயிர் அழிவுகள் அல்ல உயிர் தோற்றங்கள் உயிர்படிமங்களிலும் (fossil) காணப்படுவது படிவளர்ச்சி கொள்கையை போற்றும் பரிணாமவியலாளர்களுக்கு சம்மட்டி அடிதான். ஆனால் இதே நிலைதான் பரிணாம கோட்பாட்டின் மையத்திலேயே இருக்கிறது என்பதை இன்ஷா அல்லாஹ் வரும் தொடர்களில் காண்போம்.

Ref:
1. P.No.5 ,Evolution by Mark Ridley
2. P.No.304, The Growth of Biological Thought: Diversity, Evolution, and Inheritance

No comments:

Post a Comment